» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா!
செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:10:05 PM (IST)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முதலாக விடியற்காலை மூன்று மணி அளவில் மங்கல இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் அவர்களின் உறைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குரு போற்றி மந்திரம் படிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு மந்திரங்கள் முழங்க அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு ஆந்திர மற்றும் தெலுங்கானா இயக்க பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து யுகாதி பண்டிகையை யொட்டி பக்தர்களுக்கு வெல்லம், வேப்பம் பூ ஆகியவற்றால் செய்த யுகாதி பச்சடியினை செவ்வாடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள். மேலும் பக்தர்கள் அருள் கூடத்தில் உள்ள அடிகளாரின் பாதுகைக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து சித்தர் பீடத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூன்று மணி அளவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் தங்கத் தேர் பவனி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆந்திரா ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாநில தலைவர் கங்காதரன், தெலுங்கானா தலைவர் கலாதர், நிர்வாகிகள், சுரேஷ்குமார், சரிதா, ஹரிநாத், சீதாராம ரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு செய்திருந்தனர்.