» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: அம்பையில் ஆட்சியர் ஆய்வு
சனி 6, ஏப்ரல் 2024 10:25:50 AM (IST)
மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு செய்தார்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், தேர்தல் செலவின உதவி பார்வையாளர்களின் பணிகள், தபால் வாக்குகள் செலுத்தும் பணிகளுக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, கூனியூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகியவற்றை ஆய்வு செய்தார்கள்.
பயிற்சிக்கான ஏற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குச்சாவடி பொருட்கள் பிரித்து அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள், பறக்கும் படையினரின் செயல்பாடுகள், தபால் ஓட்டு பெறுவதற்கான பணித்திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அலுவலருடன் தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள்.
ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் /சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ராஜேந்திரன் , சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட் , அம்பாசமுத்திரம் குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, சேரன்மகாதேவி துணை தேர்தல் வட்டாட்சியர் வசந்தி உட்பட அலுவலர்கள் உடனிருந்தார்கள்.