» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாலியல் குற்றவாளி காசியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி!

புதன் 15, ஜூலை 2026 8:34:25 AM (IST)

பாலியல் வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவருக்குக் கீழ்க்கோர்ட்டு விதித்த இயற்கை மரணம் அடையும் வரையிலான ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி (35), சமூக வலைதளங்கள் மூலமாக இளம்பெண்களுடன் பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காசியைக் கைது செய்தனர். 

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி, செல்போன்களில் இளம்பெண்கள், மாணவிகள் தொடர்பான 400-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், 1,900 ஆபாச புகைப்படங்களும் கண்டறியப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் விரைவு நீதிமன்றம், காசி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தண்டனையை எதிர்த்துக் காசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பளித்தது. திட்டமிட்ட காதல் மோசடிக்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பெண்களை வேட்டையாடும் பாலியல் குற்றவாளியான காசிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், டிஜிட்டல் உலகில் தங்களுடைய அந்தரங்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதிபதிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அறிவுறுத்தினர்.

வழக்கு விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்படும் வக்கிரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மீண்டும் மீண்டும் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் பெண் போலீஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஏற்படுகிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இத்தகைய அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் ஆதாரங்களைத் தொடர்ந்து பார்ப்பது அதிகாரிகளுக்கு மன ரீதியாகவும் நரம்பியல் ரீதியாகவும் கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, டிஜிட்டல் சாட்சியங்களுக்கான தொழில்நுட்ப விதிகளைச் செம்மைப்படுத்த வேண்டும் என்றும், உரிய பயிற்சியின் மூலம் அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory