» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குறைந்தது 5 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
திங்கள் 19, மே 2025 4:47:57 PM (IST)

தூத்துக்குடியில் மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு” - உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.05.2025), பள்ளிக் கல்வித்துநை சார்பில் 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற ‘கல்லூரிக் கனவு” - உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது:- நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெறும் இந்த கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வருகைதந்துள்ள மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த கல்லூரிக் கனவு நிகழ்ச்சி ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்திலேயே நடத்திமுடித்துள்ளோம்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாக நடத்துவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டுதல்கள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு பயணம் செய்து அங்குள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், கல்லூரியின் அடிப்படை வசதிகள் குறித்தும், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான். இதில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு ”கல்லூரிக் கனவு" உயர்கல்விக்கு வழிகாட்டுதல் முதல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இன்றைய தினம் இரண்டாவது நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 1408 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதாவது இடைநிற்றல் ஆகி மீண்டும் பள்ளியில் சேர்ந்து பயின்றவர்கள், ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள், ஒரு பெற்றோர் அல்லது இரண்டு பெற்றோர்களையும் இழந்த மாணவர்கள் என்ற பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, அவர்களை கல்லூரிக் கனவு நிகழ்ச்சிக்கு வரவழைத்து, அவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
அந்த வகையில், அவர்களுக்கான நிகழ்ச்சியாக இன்று கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இதுவரை 768 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி படிப்புக்காக விண்ணப்பித்துள்ளார்கள் எனவும், மீதமுள்ள 646 மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள். எனவே, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களையெல்லாம் கண்டறிந்து அவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, உயர்கல்வி சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ள அனைத்து மாணவர்களையும் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டுமென்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
ஆகையால், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இலக்கை அடைய வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி எடுக்கக்கூடிய பாடப்பிரிவு உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஆகையால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவா என்பதை நன்கு அறிந்து ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 3 முதல் 5 வரையில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தவறாது பின்பற்ற வேண்டும். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல்களை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்தது 5 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்கல்வி படிப்பதற்கு விருப்பமில்லை என்று எந்தவொரு மாணவர்களும் இருக்கக்கூடாது. ஏனென்றால் நீங்கள் எல்லாம் கல்லூரிக் கல்வியை அடைந்து உயர்கல்வியில் பல்வேறு வாய்ப்புகளை பெற்றால் மட்டும் தான் உங்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். ஒருவேளை இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு உங்களுடைய நண்பர்கள் யாரேனும் வராமல் இருந்திருந்தால் அவர்களுக்கு உயர் கல்வியின் அவசியம் குறித்தும், அரசின் சார்பில் வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து அவர்களை உயர்கல்வி சேர்ப்பதற்கு தேவையான முழு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக பள்ளிகளில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் தவிர சுமார் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்பாட்டுக்குவரவுள்ளது. இந்த கட்டுபாட்டு அறையில் இருக்கக்கூடிய அசிரியர்கள் உங்களை தொடர்புகொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ற பாடப்பிரிவை எடுத்துள்ளீர்களா என்று கேட்டறிவார்கள். ஏனென்றால் நீங்கள் கஷ்டப்பட்டு படித்து எடுத்த மதிப்பெண்கள் அவை. அதனால் உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ற பாடப்பிரிவு கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இன்னும் பத்து நாட்களுக்குள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் நிறைவடையவுள்ளது. இந்த குறுகிய காலத்தில் ஆசிரியர்கள் துரிதமாக செயல்பட்டு அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நமது மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற போது விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய கிட்டத்தட்ட 500 மாணவர்கள் விளையாட்டுப்பிரிவில் உள்ள இடஒதுக்கீடு மூலமாக கல்லூரியில் சேருவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். எனவே, அந்த மாணவர்களையும் கண்டறிந்து ஒரு சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா என உறுதி செய்ய வேண்டும்.
பொதுவாக, ஒரு சில மாணவர்களின் பெற்றோர்கள் அறியாமையின் காரணமாக புரிதல் இல்லாமல் இருப்பார்கள் அவர்களுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களின் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து அன்போடு எடுத்துரைத்து புரியவைத்து, உயர்கல்வியை நெறிப்படுத்தக்கூடிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்குவார்கள். எனவே, மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து ஆரோக்கியமான போட்டியுடன் சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை க்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
Angel victoriaமே 20, 2025 - 07:43:12 AM | Posted IP 162.1*****
முதலில் உயர்கல்வி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யவும்.
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

Johnமே 20, 2025 - 12:29:14 PM | Posted IP 104.2*****