» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்: நேசமணி சிலைக்கு ஆட்சியர் மரியாதை!
சனி 2, நவம்பர் 2024 3:48:22 PM (IST)

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, குமரி தந்தை மார்ஷல் நேசமணி திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்-
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி அன்று அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணைபிறப்பித்ததன் அடிப்படையில், தாய்தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைவதற்கு பாடுபட்டவர்களில் ஒருவரான குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
¬ கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தபோது நமது தாய்த்தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட இன்றைய விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கிள்ளியூர், திருவட்டார் உள்ளிட்ட வட்டங்களை இணைப்பதற்கு அரும்பாடுபட்டவர்களில் குமரிதந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பணி முக்கியமானது. மார்ஷல் நேசமணி அவர்களுடன் இணைந்து போராடியவர்களில் பொன்னப்பன்நாடார், குஞ்சன்நாடார், சைமன், தாணுலிங்கநாடார், சிதம்பரநாதன், சிதம்பரம்பிள்ளை, மாதேவன்பிள்ளை, டேனியல், ஹுசைன், அப்துல்காதர், டாக்டர்.கிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தியா விடுதலை பெற்ற பின்னரும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தை, தமிழ்நாட்டுடன் இணைக்க பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1-ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று தமிழக அரசின் சார்பில் மார்ஷல் நேசமணி மணி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மண்டல தலைவர் ஜவகர், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா இராமகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், மார்ஷல் நேசமணி அவர்களின் மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், தமயந்தி நளதம், மாநகராட்சி உறுப்பினர்கள் நவீன் குமார், விஜிலா ஜஸ்டஸ், வழக்கறிஞர் சதாசிவம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் சரவணன், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
