» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
களியக்காவிளை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு!
செவ்வாய் 9, ஜூலை 2024 12:20:00 PM (IST)
களியக்காவிளை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தேர்தலில் வெற்றி பெற்ற பின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க டெல்லி சென்ற போது மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களை சந்தித்து களியக்காவிளை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செப்பனிட 21 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை வைத்து இந்த பணிகளை செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14. 87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை நமது மாவட்ட மக்கள் அன்றாடம் பயணிக்கும் சாலை. இந்த சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் இதில் பயணிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலை துறை மதுரை மண்டல அதிகாரி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு சாலையை செப்பனிட ஆகும் செலவினை கேட்டறிந்தேன்.
பாராளுமன்றத்தில் பதவி ஏற்று விட்டு 02.07.2024 அன்று மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை சீர் செய்ய 21 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை வைத்தேன். 4 வழி சாலை பணிகள் முடிவுற இன்னும் ஒரு வருடமாவது ஆகும் எனவும், அதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை மட்டுமே உள்ளது என எடுத்து கூறினேன்.
மேலும் மோசமான சாலை காரணம் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்தும் விளக்கினேன்.கோரிக்கையை ஏற்று உடனடியாக தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட 14.87 கோடி ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கி தேசிய நெடுஞ்சாலை விரைவில் சீர் செய்யப்படும் என்று விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.