» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குரூப் 1 தேர்வுக்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 21, ஜூன் 2024 5:16:29 PM (IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதனிலை தேர்வுக்கு மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 1 முதனிலை (TNPSC GROUP I PRELIMS) தேர்வானது ஜீலை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னர் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாநில அளவில் இலவச மாதிரி தேர்வானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக 24.06.2024, 27.06.2024, 02.07.2024, 05.07.2024 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த மாதிரி தேர்வானது காலை 9.30 மணியளவில் தொடங்கி 12.30 மணி வரை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்குள்) நடைபெறவுள்ளது. மாணவர்கள் அனைவரும் 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை தேர்வு நாளன்று கொண்டுவருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இவ்வலுவலக Telegram Channel லான DECGCNGL-ல் பகிரப்பட்டுள்ள Google Form ல் பிழையின்றி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.