» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.7.55 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்!!
செவ்வாய் 12, மார்ச் 2024 5:33:41 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ரூ.7.55 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், முன்னிலையில் இன்று (12.03.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் கப்பியறை பேரூராட்சியில் SFC-URDF திட்டத்தின் கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பில் சிந்தன் விளை முதல் கருங்கல் வரை (ஐயன்விளை வழியாக) செல்லும் சாலை பணியும், ரூ.93 இலட்சம் மதிப்பில் புலிமுகத்தான் குறிச்சி, பாம்பூரிவாய்க்கால் சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.2 கோடி சக்கப்பற்று சால்வேஷன் ஆர்மி சர்ச் முதல் பெரியகுளம் சாலை மற்றும் சக்கப்பற்று ஏலா முதல் பெரியகுளம் சாலை தார் சாலை அமைத்து மேம்பாடு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.92 இலட்சம் மதிப்பில் முகுந்தன் விளை முதல் ஆற்றங்கரை செல்லும் சாலைப்பணியும், கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயலற்ற நிதி (2023 - 24) திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் காக்கா தோப்பு சுடுகாடு சாலை, சூரப்பள்ளம் குறண்டி சாலை மற்றும் கன்னங்குறிச்சி கீழவூர் பத்ரகாளியம்மன் கோவில் முதல் அய்யா கோவில் வரை சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும்,
கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பில் இராஜாக்கமங்கலம் அண்ணா காலனி சாலை மேம்பாட்டு பணிகள், தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் Peri Urban (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.37.46 இலட்சம் மதிப்பில் அத்திக்கடை திகிலன்விளை தாமரைகுட்டிவிளை தார்சாலை அமைக்கும் பணியும், ரூ.15 இலட்சம் மதிப்பில் கடற்கரை சாலை முதல் தாமரை குட்டிவிளை வரை தார் சாலை அமைக்கும் பணியும், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.92 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் என மொத்தம் ரூ.7.55 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.