» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!!

புதன் 27, டிசம்பர் 2023 3:58:31 PM (IST)



விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட மணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் இன்று (27.12.2023) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அரங்குகளை நேரில் பார்வையிட்டு பேசுகையில்:-
 
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வழிவகை செய்கிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் கடந்த 22.11.2023 அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 27.12.2023 முதல் 06.01.2024 வரை அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி மற்றும் புற நகர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் வட்டங்களிலும் மொத்தம் 78 முகாம்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று விளவங்கோடு வட்டம் பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட மணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் எரிசக்தித் துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கம்பங்கள் மாற்றம் குறித்த சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை / ஊரக வளர்ச்சித் துறையில் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி / குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வழங்குதல், தண்ணீர் / கழிவுநீர் இணைப்பு, பிறப்பு / இறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, PMSVAnidhi சேவைகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின்கீழ் பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசுச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள். முதியோர் / கைம்பெண் / கணவனால் கைவிடப்பட்டவர் / மாற்றுத்திறனாளி/முதிர்கன்னி மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கவும், காவல் துறையின் கீழ் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக, நில அபகரிப்பு / மோசடி / வரதட்சணை மற்றும் இதர புகார்கள், போஸ்கோ சட்டத்தின் கீழ் புகார்கள் அளிக்கவும், 

மாற்றுத் திறனாளிகள் துறையில் பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைக் கால், காது கேட்கும் கருவி, இதர உதவி உபகரணங்கள், சுய தொழில் வங்கிக் கடன் உதவி கல்வி உதவித் தொகை தொழிற் பயிற்சி ஆகியவற்றிற்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத்தில் வீடு வேண்டி, வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான / விற்பனைப் பத்திரம், நில உபயோக மாற்றத்திற்கான தடையின்மைச் சான்று, 

மனை வரன்முறை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கவும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை / ஆதிதிராவிடர் நலத் துறை / பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை / கூட்டுறவுத் துறையின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் கல்வி உதவித் திட்டம், கல்வி உதவித் தொகை (ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) ஆதிதிராவிடர் நலத் துறையில் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, சலவைப் பெட்டி / தையல் இயந்திரம் மற்றும் இதர உதவிகள், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ கடனுதவி, டாம்கோ / டாப்செட்கோ / கூட்டுறவுக் கடனுதவிகள் / மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்கிறவர்கள் அதற்குரிய ஆவணங்களை வழங்கி விண்ணப்பிக்கலாம். 

தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவுசெய்ய வேண்டியிருப்பின், அக்கோரிக்கைக்கான அனைத்து ஆவணங்களையும் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். இம்முகாம் ஆளூர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் மிகவும் பேரூதவியாக இருக்கும் என்பதை தெரிவத்துக் கொள்கிறேன். மேலும் 4 வட்டங்களில் இன்று நடைபெற்ற இம்முகாமில் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முகாமில் தனித்துணை ஆட்சியார் (ச.பா.தி) குழந்தைசாமி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் விஜய லெட்சுமி, விளவங்கோடு வட்டாசியர் குமாரவேல், பளுகல் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ரமாதேவி, பளுகல் பேரூராட்சி தலைவர் நிஜி, துணைத்தலைவர் ஜெயேந்திரன், அனைத்து துறை அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory