» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் விபசாரம்: 3 பெண் புரோக்கர்கள் கைது!
வெள்ளி 22, டிசம்பர் 2023 5:29:39 PM (IST)
நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அந்த மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்தார். அவருடன் 2 ஆண்கள் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவரை அம்மாண்டிவிளையை சேர்ந்த கீதா (34), வெள்ளமடத்தை சேர்ந்த சாந்தி (32) ஆகியோர் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதா, சாந்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
இதேபோல் வடசேரியில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் புரோக்கர் இறச்சகுளத்தை சேர்ந்த நளினி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு பெண் புரோக்கரை போலீசார் தேடி வருகிறார்கள்.