» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் : ஆட்சியர் ஸ்ரீதர் அனுப்பி வைத்தார்!
வியாழன் 21, டிசம்பர் 2023 10:43:45 AM (IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் த்துறையின் சார்பில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நிவாரண பொருட்களை அனுப்பிவைத்து, தெரிவிக்கையில் "தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து வழக்கம்போல் அனைத்து பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஓரளவு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஊராட்சித்துறையின் சார்பில் அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, சீனி, துவரம் பருப்பு, பாசி பயிறு, சேமியா, ரவை, உப்பு, பிரட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பால்பவுடர், ஆயில், போர்வை, சட்டை, டவல், அடங்கிய உணவு பொருட்கள் இன்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பீபீ ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.