» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்ததால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல் இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இப்போரின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் பலியாகினர்.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் பதிலடி: தங்கள் தலைவரைப் பறிகொடுத்த ஆவேசத்தில் ஈரான், இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளான அமீரகம், கத்தார் மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து நீண்டதூர ஏவுகணைகளை வீசி வருகிறது. குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்; 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போரின் நிலை குறித்துப் பின்வருமாறு தெரிவித்தார்: "ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது. ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால், அதன் தற்காப்பு அரண்களை உடைக்க இன்னும் 4 வாரங்கள் வரை இந்தத் தாக்குதல் நீடிக்கும்."
ஈரானின் உயர்நிலைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 48 முக்கியத் தலைவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்கா எதிர்பார்த்ததை விடப் பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பதும், அவர்களின் நீண்ட தூர ஏவுகணைகளை அழிப்பதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் தெளிவுபடுத்தினார்.
பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தும், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை ஈரான் புறக்கணித்ததே இந்தப் போருக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டினார். இருதரப்பும் நவீன ஆயுதங்களுடன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. உலக நாடுகள் இந்தப் போரை மிகுந்த கவலையுடன் உற்றுநோக்கி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)


