» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எப்ஸ்டீன் விவகாரத்தில் குற்றச்சாட்டு: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மறுப்பு

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:34:38 AM (IST)



எப்ஸ்டீன் விவகாரத்தில் எழுந்த அழுத்தம் காரணமாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலகக் கோரிக்கைகள் வலுத்தன. இருப்பினும், தாம் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று அவர் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியின் மையப்புள்ளி பீட்டர் மேண்டல்சன் என்பவரது நியமனம் ஆகும். பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் மேண்டல்சனுக்கு தொடர்பு இருந்தது தெரிந்தும், அவரை அமெரிக்காவிற்கான பிரிட்டன் தூதராக பிரதமர் ஸ்டார்மர் நியமித்தார்.

தற்போது வெளியாகியுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள், 2008-ல் எப்ஸ்டீன் தண்டனை பெற்ற பிறகும் மேண்டல்சன் அவருடன் நெருங்கிய நட்பில் இருந்ததையும், அரசு ரகசியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இதுவே ஸ்டார்மருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களே ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார், "டவுனிங் ஸ்ட்ரீட்டில் (பிரதமர் அலுவலகம்) தலைமை மாற வேண்டிய நேரம் இது" என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், "மக்களிடம் 5 ஆண்டுகளுக்கான ஆணையைப் பெற்றுள்ளேன், நான் விலகப்போவதில்லை" என்று ஸ்டார்மர் உறுதியாகக் கூறியுள்ளார்.

பிரதமரின் தலைமை ஆலோசகரான மார்கன் மெக்ஸ்வீனோ மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் டிம் ஆலன் ஆகிய இரு முக்கிய அதிகாரிகள் கடந்த 24 மணிநேரத்தில் பதவி விலகியுள்ளனர். மேண்டல்சன் நியமனத்திற்கு தாங்களே காரணம் என்று கூறி அவர்கள் விலகினாலும், இது பிரதமருக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

2008-2010 காலக்கட்டத்தில் மேண்டல்சன் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா என்பது குறித்து லண்டன் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், மேண்டல்சனின் பிரபு (Lord) பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளையும் ஸ்டார்மர் அரசு தொடங்கியுள்ளது.

மேண்டல்சன் போன்ற சர்ச்சைக்குரிய நபரை மிக முக்கியமான பதவிக்கு நியமித்தது ஸ்டார்மரின் அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்பது விமர்சனம். "நேர்மையான ஆட்சி" தருவதாகக் கூறி பதவிக்கு வந்த ஸ்டார்மர், குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory