» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான், ரஷியா இரங்கல்!
சனி 3, ஜூன் 2023 4:51:02 PM (IST)
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரயில், 1 சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் . என தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர்
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது" "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்". என்று அவர் தெரிவித்து உள்ளார்.