» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரிவினைவாதிகளைப் புகழ்ந்து புத்தகம் வெளியீடு: 3 பதிப்பாளர்கள் அதிரடி கைது!

திங்கள் 13, ஜூலை 2026 12:07:20 PM (IST)

BookReleasArret.jpg

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் புத்தகம் அச்சிட்டுப் புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டில் 3 பதிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ‘லெஜண்ட்ஸ் அண்ட் பெர்சனாலிட்டிஸ் ஆஃப் ஜம்மு அண்ட் காஷ்மீர்’ (Legends and Personalities of Jammu and Kashmir) என்ற புத்தகம் வெளியானது. இப் புத்தகத்தில் சையத் அலி ஷா கிலானி, மஸ்ரத் ஆலம் மற்றும் மிர்வைஸ் உமர் ஃபரூக் உள்ளிட்ட பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீரின் ‘சிறந்த ஆளுமைகள்’ என்று விவரித்துள்ளதுடன், தீவிரவாதக் கோட்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இவ் விவகாரம் தொடர்பாக ஜம்முவின் உளவுத்துறை பிரிவு (சிஐஜெ) அதிகாரிகள் டெல்லி மற்றும் ஜம்முவில் உள்ள பதிப்பகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். புத்தகத்தின் அச்சிடுதல், விநியோகம் மற்றும் சப்ளை தொடர்பான முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே, விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட 3 பதிப்பாளர்கள் முறைப்படி கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் இருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்முவைச் சேர்ந்தவர். இதில் டெல்லியைச் சேர்ந்த பதிப்பாளர் ஒருவர், வெளியீடு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை அழித்து ஆதாரங்களை மறைக்க முயன்ற போதும், புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை நடத்தி முக்கியத் தரவுகளை வெற்றிகரமாக மீட்டெடுத்தனர்.

இப் புத்தகத்தை வெளியிடுதல், அச்சிடுதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் கல்வித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான சந்தோஷ் மீனா என்பவரிடம் விசாரணை நடத்தச் சிஐஜெ குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியரான ஹிலால் அகமதுவை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory