» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் கடும் வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடி நாளை ஆய்வு

திங்கள் 8, செப்டம்பர் 2025 11:18:53 AM (IST)

பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்கிறார்.

இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாப்பில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்த தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 46 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். 1.75 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதனை பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவித்துள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்வதுடன், கள நிலவரம் பற்றி அறிந்து அதிகபட்ச உதவிகளை வழங்குவார் என்றும் ஜாக்கர் கூறினார்.

இதேபோன்று பஞ்சாப்புக்கு 2 மத்தியக்குழுவும் வர இருக்கின்றனர் என்றும், அவர்கள் மாநிலத்தில் வெள்ள நிலவரம் பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றும் ஜாக்கர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் போன்று இமாசல பிரதேசத்திலும் வெள்ளம் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இமாசல பிரதேசத்தில், பருவமழையையொட்டி கடந்த 2 மாதங்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்றவை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புக்கு 366 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று, அரசு சொத்துகளில் ரூ.4,006 கோடி மற்றும் தனியார் சொத்துகளில் ரூ.67 கோடியும் பாதிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ரூ.4,079 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,390 வீடுகள், 40 குடிசைகளும் சேதமடைந்து உள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்து உள்ளன. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை இமாசல பிரதேசத்திற்கும் நேரில் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory