» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஞாயிறு 5, மே 2024 8:06:39 PM (IST)



பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரபசிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ஜானி பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரைலி ரூசோ 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, பிரபசிம்ரன் சிங் மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், ஷஷாங் சிங் 27 ரன்களிலும், பிரபசிம்ரன் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சாம் கரண் (7 ரன்கள்), ஜித்தேஷ் சர்மா (0 ரன்), அஷுட்டோஸ் சர்மா (3 ரன்கள்) மற்றும் ஹர்சல் படேல் (12 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory