» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கொல்கத்தா வெற்றியால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கல்?
திங்கள் 15, மே 2023 12:23:59 PM (IST)
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற டெல்லிக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நெருக்கடியான நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நாடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது. இந்த போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் கொல்கத்தா வீழ்த்தியது . அத்துடன் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது;
இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்தை வீசிய நிமிடமே எங்களுக்கு 180 ரன்கள் தேவை என்று தெரிந்துவிட்டது. அப்போது தான் பேட்டிங் செய்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். ஆனால் இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எடுக்க எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது. போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூறமுடியாது. அனைவரும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். இவ்வாறு தோனி கூறினார்.
கொல்கத்தா அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தற்போதைய வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேவேளையில் தனது 13-வது ஆட்டத்தில் 5-வது தோல்வியை சந்தித்த சிஎஸ்கே 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் தொடர்கிறது. சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சிஎஸ்கே அணி.