» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா விளக்கம்
திங்கள் 5, டிசம்பர் 2022 12:21:43 PM (IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 186 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி 46 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
"186 ரன்கள் என்பது போதுமான ரன்கள் இல்லை. ஆனால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தோம். அதன் மூலம் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நாங்கள் 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடி நாங்கள் பழக்கப்பட்டவர்கள். அதனால் இதற்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது. அடுத்த போட்டியை எதிர்பார்த்து உள்ளோம்” என ரோகித் தெரிவித்தார்.
தொடருக்கு ஒரு கேப்டன், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு ஆடும் லெவன் என களம் இறங்கினால் இந்த மாதிரியான முடிவுகளைதான் எட்ட முடியும். நிலையான அணி வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணியை சாடி வருகின்றனர். இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல்.ராகுல், 43-வது ஓவரில் ஒரு கேட்ச் வாய்ப்பை டிராப் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.