» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
திங்கள் 1, ஆகஸ்ட் 2022 12:13:30 PM (IST)
காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதமானதால், தலா 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 18 ஓவரில் 99 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 32 ரன், கேப்டன் பிஸ்மா மரூப் 17, அலியா ரியாஸ் 18, ஒமைமா மற்றும் ஆயிஷா தலா 10 ரன் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா, ராதா யாதவ் தலா 2, ரேணுகா, மேக்னா, ஷபாலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து வென்றது.
ஷபாலி வர்மா 16, சபினேனி மேக்னா 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஸ்மிரிதி மந்தனா 63 ரன் (42 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெமிமா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. ஏ பிரிவில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் பர்படாஸ் அணியை சந்திக்கிறது.