» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை : சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்
சனி 14, மே 2022 5:22:21 PM (IST)
அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு, அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
தனது ஓய்வு முடிவு குறித்து ராயுடு கூறும்போது, "இது எனது கடைசி ஐபிஎல் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், சிறிது நேரத்தில் அதனை நீக்கினார், இதன்பிறகு அவர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ; சரியாக செயல்படாததால் சற்று அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் . அதனால், தவறுதலாக அந்த டுவிட்டை பதிவிட்டுள்ளார் . அவர் ஓய்வு பெறவில்லை".அவர் எங்களுடன் இருப்பார்."என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.