» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20 உலக கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!!
வெள்ளி 12, நவம்பர் 2021 8:47:58 AM (IST)
டி-20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் துபையில் விளையாடின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் அஸாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். ரிஸ்வான் தொடக்கத்தில் சற்று தடுமாற அஸாம் பவுண்டரிகள் அடித்து நெருக்கடியைத் தணித்தார். 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது. முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 67 ரன்களும், பாபர் அசாம் 39 ரன்களும், பகார் ஜமான் 55 எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரோன் ஃபின்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 28 ரன்களை சேர்த்தார். அடுத்தடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் (5), மேக்ஸ்வெல் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், மார்கஸ் நிதானமாக ஆடி 31 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். அதன் பிறகு வந்த மேத்திவ் வாடே அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். இதனால், 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.