» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!

வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)

SeemanSonamFast19Neet.jpg

நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து 18 நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 18 நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லடாக் சூழலியல் அறிஞர் சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவரது உடல் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காக்கவும், நீட் தேர்வு வினாத்தாள் வெளியீடு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு இணைந்து சோனம் வாங்சுக் இக்களத்தைக் கண்டுள்ளார். நீட் போன்ற ஒற்றைச் சாளரத் தேர்வு முறையானது மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் ஒரு தேர்வு வாரியமாக மாறியுள்ளது என்றும், இது ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பின் மீதான நிர்வாகத் தோல்வி என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் உண்ணாநிலை காரணமாகச் சோனம் வாங்சுக்கின் உடல் எடை 9 கிலோவிற்கும் மேல் குறைந்து, தசை இழப்பு ஏற்பட்டு இதயம் பலவீனமடைந்துள்ள சூழலிலும் மத்திய அரசு மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் தமிழாக்கத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்ற தற்போதைய முதல்வர் விஜய், இச்சம்பவம் குறித்து எந்தவொரு குரலும் எழுப்பாமல் அமைதி காப்பது வருத்தமளிப்பதாகச் சீமான் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு காலங்கடத்தாமல் ஜந்தர் மந்தரில் போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நீட் போன்ற தேர்வு முறைகளை முற்றிலும் கைவிட்டு, வினாத்தாள் வெளியீட்டிற்குக் காரணமானவர்கள் மீதும், கல்வி அமைச்சகத்தின் மீதும் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், சோனம் வாங்சுக்கின் அறப்போராட்டத்திற்குத் தங்களது முழு ஆதரவையும் சீமான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory