» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

கடையநல்லூர் அருகே லாரி ஓட்டுநரை மர்மக் கும்பல் வழிமறித்து, தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, லாரி ஓட்டுநர். இவருக்கு இசக்கலை என்ற மனைவியும், மிதுன்ராகுல் என்ற மகனும், அனன்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று இரவு மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் பொய்கை பகுதிக்குச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு பள்ளிக்கூடம் அருகே கருப்பன்கோவில் வழியாக வந்தபோது, அவரை ஒரு மர்மக் கும்பல் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் மாரிமுத்துவின் தலையை அரிவாளால் வெட்டித் துண்டித்தது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அவ்வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குத் டிஎஸ்பி மதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன், அலெக்ஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த மாரிமுத்துவின் செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

கொலைச் செய்தியறிந்து மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "இதற்கு முன்பும் கரடிகுளம் - ஆவுடையாபுரம் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் இரண்டு நபர்கள் இறந்து கிடந்தனர். அதுகுறித்து காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாரிமுத்துவைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யாமல் உடலை எடுக்க விடமாட்டோம்" என ஆவேசத்துடன் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததால், குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்குமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகாட்சிகளைப் பெற்று, தப்பியோடிய மர்ம நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory