» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.48.75 லட்சம் சுருட்டிய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!

புதன் 10, ஜூன் 2026 8:18:44 AM (IST)

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் மிரட்டி, ரூ.48.75 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்குக் கடந்த மாதம் வாட்ஸ்ஆப் செயலி மூலம் விடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பாதுகாப்புப் படையினரின் சீருடையில் இருந்த இரு நபர்கள் தொடர்பு கொண்டு, தங்களைத் தீவிரவாதிகள் எதிர்ப்புப் படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த முதியவரிடம், "உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தீவிரவாதிகளின் வங்கிக் கணக்கிற்குப் பெருந்தொகை அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே, இக்குற்றச்சாட்டிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால் நாங்கள் கூறும் ரிசர்வ் வங்கியின் தற்காலிகப் பாதுகாப்பு வங்கிக் கணக்கிற்கு உங்கள் கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக அனுப்புங்கள். எங்களின் தீவிர விசாரணை மற்றும் ஆய்வுக்குப் பின் இப்பணம் உங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்; நீங்களும் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்" எனத் தீவிரமாக மிரட்டியுள்ளனர்.

அதிகாரிகளின் சீருடையைக் கண்டு பயந்துபோன அந்த முதியவர், அவர்கள் கூறிய வங்கியின் கணக்கு எண்ணிற்குத் தனது கணக்கிலிருந்து ரூ. 48.75 லட்சத்தை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால், பணம் அனுப்பி ஒரு மாதமாகியும் இழந்த தொகையோ அல்லது ரிசர்வ் வங்கியிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலோ வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த முதியவர், தமக்கு அழைப்பு வந்த பழைய எண்களைத் தொடர்பு கொண்டபோது அவை அனைத்தும் பயன்பாட்டில் இல்லை எனத் தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாகத் தூத்துக்குடி சைபர் கிரைம் பிரிவில் முறைப்படி புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அபிஷேக் குப்தா அவர்களின் அதிரடி உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சகாயஜோஸ், ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் திவாகர் மற்றும் சைபர் பிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் நவீன தொழில்நுட்ப ரீதியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இத்துணிகர ஆன்லைன் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்த ரிஜோய் (36) மற்றும் சம்நாத் (27) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற தனிப்படை அதிகாரிகள், அங்கு பதுங்கியிருந்த இரு குற்றவாளிகளையும் திங்கள்கிழமை (ஜூன் 8) அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். இது தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory