» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!

புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

நெல்லையில் கணவரைப் பிரிந்த வேதனையில், 2½ வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டுத் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா, நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தனிஷ்கா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது.

திருமணமாகிச் சில நாட்களிலேயே தம்பதியிடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கம், தனது குழந்தையுடன் நடுவக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கேயே தங்கி இருந்துள்ளார்.

தங்கம் கடந்த சில நாட்களாகக் கணவரைப் பிரிந்த ஏக்கத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தங்கத்தின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் லட்சுமி, படுக்கையறைக்குச் சென்றபோது அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அறையில் ஒரு சேலையில் பேத்தி தனிஷ்காவும், மற்றொரு சேலையில் மகள் தங்கமும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கம், தனது மகளை முதலில் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார். 2½ வயதுக் குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory