» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!

வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

தவெக பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி வருவதாக பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் புகார் அளித்தார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றியவர் பொன்ராஜ். இவர், தவெக குறித்து பேசியிருக்கும் வீடியோவில் கட்சியின் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தவெக தலைவர் விஜய், டிஜிபி அலுவலகத்தில் நேற்றிரவு புகார் மனு அளித்தார்.

அதில் கூறி யிருப்பதாவது: திமுக-வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்பவர், ஒட்டுமொத்த பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார். ஆளும் கட்சியான திமுக தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னையாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் அவர் எல்லை கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

பெண்களை மிக மோசமாக பேசி வரும் பொன்ராஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறிஉள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நடிகர் விஜய்கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக டிஜிபி அலுவலகம் வரை நேரடியாக வந்து புகார் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக பின்புலம் திமுக-வின் ஆதரவோடு, அவர்களின் உறுதுணையோடு பெண்களை பொன்ராஜ் கேவலமாக இழிவுபடுத்தி பேசியிருப்பது பற்றி டிஜிபி அலுவலகத்துக்கு தவெக தலைவர் விஜய் நேரில் வந்து அவரே கையொப்பமிட்டு மனுவை வழங்கி இருக்கிறார்.

அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இவருக்கும் சகோதரிகள், தாய்-தந்தை இருக்கிறார்கள். இவற்றை மனதில் வைத்து அவர் பேசியிருக்க வேண்டும். அவர் எல்லைமீறி பேசியதற்குக் காரணம் திமுகவின் பின்புலமே என்பதைத் தவிர வேறு இல்லை. எனவே, இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியை நேரில் சந்தித்து விஜய் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory