» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அணைக்கட்டுகளின் ஆயுளை நீட்டிக்க மின்வேதியியல் ஆய்வு: தூத்துக்குடியில் விஞ்ஞானி தகவல்

ஞாயிறு 8, மார்ச் 2026 8:02:33 PM (IST)



பாம்பன் பாலம், அணைக்கட்டுகள் உள்ளிட்ட நாட்டின் முக்கியக் கட்டமைப்புகள் துருப்பிடிக்காமல் பாதுகாத்து, அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது குறித்த தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் (CECRI) முதன்மை விஞ்ஞானி டேனியல் ரொனால்ட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஞ்ஞானி டேனியல் ரொனால்ட் ஜோசப், இளம் பொறியாளர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மண்டபத்தில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் உலோகங்கள் துருப்பிடிப்பதிலிருந்து தடுப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் சொத்துக்களான அணைக்கட்டுகள், பாம்பன் பாலம் போன்ற கட்டுமானங்கள் உப்புக்காற்று மற்றும் நீரினால் துருப்பிடிக்காமல் பாதுகாப்பதற்கும், அவற்றின் ஆயுளை அதிகரிப்பதற்கும் தேவையான நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

புவி வெப்பமடைதல் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளக் கட்டுமானங்கள் அந்த வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையா என்பது குறித்த சோதனைகளை எங்களது ஆய்வகம் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களைத் தொடங்கும்போது ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், கட்டுமானங்களின் தரத்தை உறுதி செய்யவும் எங்களது மையம் ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கைகளை வழங்கி வருகிறது.



மின்வேதியியல் (Electro-chemistry) துறையில் தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கெனத் தனிப் படிப்புகள் உள்ளன. முதுநிலைப் பட்டதாரி மாணவர்கள் எங்களது மையத்தில் ஆராய்ச்சித் திட்டங்களை (Projects) மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. இங்குப் பயின்ற மாணவர்கள் உலகளாவிய நிறுவனங்களில் உயரிய பொறுப்புகளில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory