» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளையங்கோட்டையில் நீச்சல் பயிற்சி முகாம் : மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்!
செவ்வாய் 23, ஏப்ரல் 2024 5:50:17 PM (IST)
பாளையங்கோட்டையில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமிற்கு நபர் ஒன்றுக்கு ரூ.1770 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் கீழ் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன்நகர் அருகில் அமைந்துள்ள நீச்சல் குளங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நீச்சல் கற்றுக்கொள் திட்டம் (Learn to swim course) 12 நாட்கள் வீதம் ஐந்து பிரிவுகளாக ஏப்ரல் 2, 2024 முதல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது பிரிவு நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 30.4.2024 அன்று நிறைவடைந்து 02.5.2024 அன்று மூன்றாம் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது
இம்முகாமிற்கான முன்பதிவு தற்சமயம் நடைபெற்று வருகிறது. சிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நன்றாக நீந்தும் அளவிற்கு இந்நீச்சல் கற்று கொள் திட்டத்தின் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. நீர் நிலை விபத்துக்களில் தங்களையும், தங்கள் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையிலும் மற்றும் உடல் ஆரோக்கியத்தினை பேணிடும் வகையிலும் அனைத்து மக்களும் இந்நீச்சல் பயிற்சியில் கலந்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி முகாமிற்கு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.1770/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சியின் நிறைவு நாளன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் சிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு வருடம் முழுவதும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். ஆகவே பொதுமக்கள், மாணவ/ மாணவியர்கள் உடனடியாக இந்நீச்சல் பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விவரம் அறிய திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.பிரேம்குமார் அவர்களை 7401703506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். திருநெல்வேலி மாவட்டத்தினைச் சார்ந்த அதிக மக்கள் இந்நீச்சல்பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெற்றிடுமாறு திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பிரேம்குமார் தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.