» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை வழக்கில் தந்தை-2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
ஞாயிறு 24, அக்டோபர் 2021 11:25:18 AM (IST)
கொத்தனாைர கொன்ற தந்தை-2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ் குமார் (24). கொத்தனார். அதே பகுதியைச் சேர்ந்தவர் திருமலையாண்டி (70). இவருடைய மகன்கள் மணிகண்டன் (34), மாரியப்பன் (31) ஆகிய 2 பேரும் ஆட்டோ டிரைவர்கள். கடந்த 9-1-2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரூபன் காயமடைந்தார். இதனை அறிந்த முருகேஷ் குமார், மணிகண்டனை கண்டித்தார். இதுதொடர்பாக மணிகண்டன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் மணிகண்டன், அவருடைய தம்பி மாரியப்பன், தந்தை திருமலையாண்டி ஆகிய 3 பேரும் முருகேஷ் குமாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த முருகேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், மாரியப்பன், திருமலையாண்டி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னத்துரை பாண்டியன் ஆஜரானார்.