» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

கன்னியாகுமரி கடலோரப் பகுதியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னியாகுமரியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகக் கடலோரப் பகுதிகளில் அணுக்கனிம மணல் அகழ்வு மற்றும் சுரங்கத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக இத்திட்டத்தை எதிர்த்த தவெக, தற்போது அரசாணை மூலம் காலக்கெடுவை நீட்டித்திருப்பது அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
அணுசக்தி உற்பத்தித் துறைக்குத் தேவையான அரிய கனிமங்களான யுரேனியம், தோரியம், இலாமினைட் மற்றும் மோனசைட் ஆகியவை கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை அகழ்ந்தெடுக்க மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மோனசைட் போன்ற கனிமங்களால் காற்றில் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளூர் மக்களிடம் நிலவுகிறது. மேலும், மணல் அகழ்வினால் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துவிடும் என்பதால் மீனவச் சமூகத்தினரும் இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இத்தகைய சூழலில், தவெக அரசு இத்திட்டத்திற்கான அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)



SankarJul 1, 2026 - 04:16:16 PM | Posted IP 162.1*****