» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

கன்னியாகுமரி கடலோரப் பகுதியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னியாகுமரியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகக் கடலோரப் பகுதிகளில் அணுக்கனிம மணல் அகழ்வு மற்றும் சுரங்கத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக இத்திட்டத்தை எதிர்த்த தவெக, தற்போது அரசாணை மூலம் காலக்கெடுவை நீட்டித்திருப்பது அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
அணுசக்தி உற்பத்தித் துறைக்குத் தேவையான அரிய கனிமங்களான யுரேனியம், தோரியம், இலாமினைட் மற்றும் மோனசைட் ஆகியவை கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றை அகழ்ந்தெடுக்க மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், மோனசைட் போன்ற கனிமங்களால் காற்றில் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளூர் மக்களிடம் நிலவுகிறது. மேலும், மணல் அகழ்வினால் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்துவிடும் என்பதால் மீனவச் சமூகத்தினரும் இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இத்தகைய சூழலில், தவெக அரசு இத்திட்டத்திற்கான அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)



SankarJul 1, 2026 - 04:16:16 PM | Posted IP 162.1*****