» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதை அந்தந்தத் துறை அலுவலர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி நகராட்சிப் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலைய முகப்பு, வடிவீஸ்வரம், தேர்மூடு ஆகிய பகுதிகளில் விளக்குகள் பழுதின்றி எரிகிறதா என்று பார்வையிட்டார். அப்போது அங்குப் பழுதடைந்து காணப்பட்ட தெருவிளக்குகளை உடனடியாகப் புதிய விளக்குகளாக மாற்றிட மாநகராட்சிப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட நகரின் முக்கியச் சந்திப்புகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில், "மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்துள்ள மற்றும் எரியாத தெருவிளக்குகளை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பில் எவ்விதத் தொய்வும் இருக்கக்கூடாது. இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அச்சமுமின்றி நடமாடும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் தடையின்றி எரிவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வின் போது நாகர்கோவில் மாநகராட்சிப் பொறியாளர் ரகுராம், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory