» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)
நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை வசதியைப் பயன்படுத்தி கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையிலான இருவழிப் பாதை திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, நாகர்கோவில் டவுன் - இரணியல் இடையிலான பணிகள் நிறைவு பெற்று ரயில்கள் இயக்கப்படத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புதிய ரயில்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பிறகு, நாகர்கோவில் சந்திப்பு முதல் இரணியல் வரையிலான 18 கி.மீ தூரம் தற்போது முழுமையான இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 87 கி.மீ நீளமுள்ள கன்னியாகுமரி - திருவனந்தபுரம் திட்டத்தில் சுமார் 40 சதவீதப் பணிகள் (34 கி.மீ) முடிந்துள்ளன. இதனால் ரயில்கள் கிராசிங்கிற்காகக் காத்திருக்கும் நேரம் குறைந்து, ரயில் இயக்கம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியக் கோரிக்கைகள்:
1. மங்களூர் எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு: திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348) ரயிலைக் கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். கொல்லூர் முகாம்பிகை, உடுப்பி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்ல நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லை. திருவனந்தபுரத்தில் பகல் முழுவதும் சும்மா நிற்கும் பெட்டிகளை நாகர்கோவில் வரை இயக்கினால், திருவனந்தபுரம் நிலையத்தின் இடநெருக்கடி குறையும்.
2. திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி ரயில்: காலை 6:50-க்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் (56306) ரயிலைத் திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல், மாலை 18:20-க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலைத் திருநெல்வேலியில் இருந்து (17:15 மணி) தொடங்கும் வகையில் மாற்ற வேண்டும். இதனால் கல்குளம், விளவன்கோடு தாலுகா மக்கள் பெரிதும் பயனடைவர்.
3. அமித் பாரத் ரயில் தினசரி இயக்கப்பட வேண்டும்: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் - நாகர்கோவில் - தாம்பரம் அமித் பாரத் வாராந்திர ரயிலை, அதன் முக்கியத்துவம் கருதி தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
4. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம்: திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இரணியல் ரயில் நிலையத்தில் இன்னும் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இருவழிப் பாதை பணிகள் முடிந்துள்ள நிலையில், கல்குளம் தாலுகா மக்களின் நலன் கருதி அங்கு நிறுத்தம் வழங்கப்பட வேண்டும்.
பயணிகள் சங்கத்தின் எதிர்பார்ப்பு: "கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகையும், கல்வி அறிவும் கொண்ட மாவட்டம். சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்காக ஆயிரக்கணக்கானோர் கேரளா மற்றும் சென்னைக்குச் செல்கின்றனர். இருவழிப் பாதை வசதியைப் பயன்படுத்தி ரயில்வே நிர்வாகம் இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்," எனப் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவிலில் பறக்கும் படையினரின் வாகன சோதனை: ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

தேர்தல் விதிமீறல்கள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:28:09 AM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

குமரியில் தேர்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிர்வாகிகள் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:24:39 PM (IST)

