» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ரயில்வே ஆலோசனை குழுவின் பதவி காலம் நிறைவு : உறுப்பினர்கள் விரக்தி
செவ்வாய் 9, ஜூலை 2024 9:55:07 AM (IST)
ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தாமல் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழுவின் பதவி காலம் முடிவுற்றதால் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர்கள் விரக்தி அடைந்துள்ளனர். உடனடியாக மத்திய ரயில்வே அமைச்சர் தலையிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ரயில்வே மண்டல எல்லைக்கு உட்பட்ட ரயில்வே வளர்ச்சி, ரயில் தேவைகள், ரயில்வே குறைகள், ரயில்வே ஆலோசனைகள் குறித்து விவாதிப்பதற்காக, தெற்கு ரயில்வே மண்டல அளவில் ஆலோசனை குழு உள்ளது.தெற்கு ரயில்வே எல்கைக்கு உட்பட்ட தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடக சில பகுதி, ஆந்திரா சில பகுதி உள்ளது.
தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழுவில் ரயில்வே மூலம் சிறப்பு பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டவர், வர்த்தக சபை, தொழில்துறை , விவசாய துறை, மாற்றுத்திறனாளி சங்கம், ரயில் பயணிகள் சங்கம், எம் பி க்கள் 9 பேர் , மாநில அரசால் நியமிக்கப்பட்ட எம் எல் ஏ ஒருவர், 6 ரயில்வே கோட்டங்களில் இருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டோர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் ரயில்வே கோட்டங்களில் இருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில் தெற்கு ரயில்வே மண்டலம் சார்பில் ஒரு ரயில்வே ஆலோசனை கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைக் கூட்டம் 14.10.22 அன்று நடைபெற்றது. அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அறிமுக கூட்டம் கூட நடத்தாமல் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழுவின் பதவி காலம் நிறைவு பெற்றுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ரயில்வே துறைக்கான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பயணிகளுக்கான தேவைகள் குறித்து விவாதிப்பதற்கான மிக முக்கியமான குழு மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு கோட்டங்களிலும் ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டங்கள் சரியான முறையில் நடைபெற்று வரும் நிலையில், தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழுவிற்கு ஒரு கூட்டம் கூட நடத்தாமல் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்று இருப்பது வருத்தமளிக்கிறது.
வருடத்திற்கு மூன்று ஆலோசனைக்குழு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது விதி. இனி வரும் காலங்களில் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கூட்டத்தை முறைப்படி நடத்த வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விஷயத்தில் தலையிட்டு தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழுவை முறையாக வழிநடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.