» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெருவெள்ளத்தில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை
சனி 6, ஜூலை 2024 9:53:14 PM (IST)
பெரு வெள்ளத்தில் சேதமடைந்த அந்தோணியார்புரம் நான்கு வழிச் சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்தோணியார்புரத்தில் நான்கு வழிச் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
எனினும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த வாரம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கியுள்ளார். இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் சேதமடைந்த பாலத்திற்குள் தவறி விழும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே 7 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படாதது மிகவும் வேதனையாக உள்ளது. ஆகவே தூத்துக்குடி நெல்லையை இணைக்கக் கூடிய இந்த முக்கியமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் வரையில் தூத்துக்குடி நெல்லை நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த ஆணையிடுமாறு வேண்டுகிறோம். ஏனென்றால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி இது ஒரு சேவைக் குறைபாடாகும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த்Jul 9, 2024 - 10:28:57 AM | Posted IP 162.1*****