» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் ஏற்பு!
வியாழன் 28, மார்ச் 2024 5:27:57 PM (IST)
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த 22 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷேஷகிரி பாபு, மேற்பார்வையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 33 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அவற்றில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்புமனுவை திரும்ப பெற வருகின்ற சனிக்கிழமை (30.03.2024) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சின்னங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), தனி வட்டாட்சியர்கள் ஜூலியன் ஹீவர், சுப்பிரமணியம், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.