» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அக்னிவீர்-வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்!
செவ்வாய் 23, ஜனவரி 2024 5:40:35 PM (IST)
அக்னிவீர்-வாயு தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்திய இராணுவத்தால் அக்னிவீர்-வாயு தேர்வுகள் இணையவழியில் 17.03.2024 முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் கலந்துகொள்ள 17.01.2024 முதல் ஆன்லைன் மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்-வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்விற்கான வயது வரம்பு மற்றும் தகுதிகள் போன்றவற்றையும் அத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அக்னிவீர் வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் இருக்க வேண்டும் அல்லது மூன்று வருட அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் பிரிவு அல்லாத பிற பிரிவு மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவுகளில் இடைநிலை/10+2/சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மாதம் 30,000 ஊதியமும், 4 ஆண்டு பயிற்சி கால முடிவில்பட்டப்படிப்பிற்கு இணையான திறன் சான்றிதழும், 10 லட்சம் வரை அக்னிவீர் நிதியும்வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.