» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.12 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் துவக்கம்
வெள்ளி 12, ஜனவரி 2024 3:27:00 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.12 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுகளை பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் தெரிசனங்கோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளை பால் வளத்துறை துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், முன்னிலையில் இன்று (24.11.2023) துவக்கி வைத்தார்
பின்னர் அவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.22 கோடி மதிப்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்ட வேப்பமூடு சந்திப்பு முதல் ராமன்புதூர் சந்திப்பு வரை 2.6 கி.மீட்டர் நீளத்திலும், ரூ.1.55 கோடி மதிப்பில் ஆலம்பாறை சந்திப்பு முதல் களியங்காடு சந்திப்பு வரை 1.6 கி.மீட்டர் சாலை மேம்பாடு செய்யும் பணியினையும் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், தோவாளை வட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மத்தியாஸ் நகர் – ஹரிஜன் காலனியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் 78 மீட்டர் நீளத்தில் தடுப்புச்சுவர் மற்றும் சிறுபாலம் கட்டும் பணியினையும், ரூ.40 இலட்சம் மதிப்பில் பன்றிபுதுகுளம் 60 மீட்டர் உயரத்தில் 3 மீட்டர் நீளத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியினையும் துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகள் வாயிலாக பேரூராட்சி பகுதி மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
அதனைத்தொடர்ந்து தெரிசனங்கோப்பு ஊராட்சியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.50 கோடி மதிப்பில் தெரிசனங்கோப்பு முதல் சுருளோடு வரை 5.50 மீட்டர் அகலத்தில் இடைவழித்தடத்திலிருந்து 7.00 மீட்டர் அகலத்தில் இருவழி தடமாக்கும் பணியினையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் பொறி.பாஸ்கர், மண்டலத் தலைவர் ஜவஹர், பூதப்பாண்டி பேரூராட்சி ஆலிவர் தாஸ், ஊராட்சிமன்றத் தலைவர்கள் தாணம்மாள் (தெரிசனங்கோப்பு), பிராங்ளின் (தடிக்காரகோணம்), தோவாளை ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பூதலிங்கம், கேட்சன், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள். பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.