» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: சகமாணவன் கைது
செவ்வாய் 4, அக்டோபர் 2022 8:48:54 AM (IST)
நாகர்கோவில் அருகே நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சகமாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும் படித்து வருகிறார். மாணவியும், மாணவரும் ஒரே கல்லூரி என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் அந்த மாணவர் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
அவரது காதலை மாணவி ஏற்று கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவி சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மாணவி 2 நாட்கள் கடந்த நிலையில் தனது வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது மாணவி தனது பெற்றோரிடம், தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று, தன்னை பலவந்தமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறினார். இதைக் கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலையில் நாகர்கோவிலில் வைத்து அந்த மாணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.