» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் - பெங்களூர் ரயில் நேரத்தை மாற்றி சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க கோரிக்கை!
திங்கள் 3, அக்டோபர் 2022 10:30:29 AM (IST)
நாகர்கோவில் பெங்களூர் ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க கோரிக்கை என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மற்றும் நெல்லை பயணிகள் பயன்படும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூர்க்கு தினசரி ரயில் சேவை 2014-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஓசூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களூர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மட்டுமே தமிழகத்தில் உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில் ஆகும். ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகளால் தொடர்ந்து வைக்கப்படுகின்றது.
இந்த நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயில் தற்போது இயங்கும் பெங்களூரு சிட்டி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மாற்றம் செய்து புதிதாக திறக்கப்பட்ட சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை முதல் இயக்கப்பட இருக்கின்றது. இந்த முனையம் விமான நிலையம் போன்று முற்றிலும் ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு ஒரு சில குறிப்பிட்ட பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாக இந்த ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டது பெங்களூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது. ஆகவே பயணிகளுக்கு சிரமத்தை கொடுத்த ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தும் விதமாக இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்லும் இந்த ரயில் பெங்களூர்க்கு காலையில் 9:20 மணிக்கு சென்று சேர்கிறது. இவ்வாறு கால தாமதமாக செல்வதால் இந்த ரயிலில் செல்லும் பயணிகள் பள்ளி கல்லூரி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. மறுமார்க்கமாக இந்த ரயில் பெங்களூரில் இருந்து மாலை ஐந்து மணிக்கு புறப்படுகிறது.
இவ்வாறு சீக்கிரம் புறப்படுவதால் அலுவலக பணிகளை முடித்து இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த ரயிலின் முனையம் மாற்றப்பட்டதால் முனைய இடநெருக்கடி பிரச்சனை இல்லை என்பதால் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கு பிறகு புறப்படு மாறும் காலஅட்டவணை அமைத்தும் மறுமார்க்கமாக பெங்களூர்க்கு காலை 7:00 மணிக்கு சென்று சேருமாறு காலஅட்டவணை அமைத்து வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்கும் போது ரயில்வேதுறையின் வருவாயில் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்கது.
கார்மேலறம் நிறுத்தம் ரத்து
பெங்களுரில் உள்ள கார்மேலறம் ரயில் நிலையம் அருகில் சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு, மாரத்தஹள்ளி, சுற்றிலும் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு கார்மேலறம் ரயில் நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது பெங்களூரில் உள்ள முனையம் மாற்றப்பட்டதால் இந்த ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்ட காரணத்தால் கார்மேலறம் ரயில் நிலையம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.