» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொதுமக்கள் ரயில் மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு
புதன் 18, மே 2022 11:32:26 AM (IST)
தூத்துக்குடியில் ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டதால், சரக்கு ரயிலை மறித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து தினமும் சரக்கு ரயில் காலை 9 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இதுபோல் இன்று காலை 9 மணியளவில் சிக்னல் கொடுக்கப்பட்டு, மடத்தூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் காலை 9.50 மணி வரையிலும் ரயில் வராததால் கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் ரயில்வே கேட் இருபுறத்திலும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பொறுமையிழந்த மக்கள் தண்டாவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் 10.04 மணிக்கு ரயில் வந்தது. ஆனால் ரயிலை செல்லவிடாமல் தடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன், சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சரக்கு ரயில் தாமதம் காரணமாக தினமும் பல மணி நேரம் ரயில்வே கேட் பூட்டியே கிடப்பதால், பள்ளி, தனியாா் நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக இப்பகுதியைக் கடந்து செல்லும் மக்களும் பாதிப்படைகின்றனர். எனவே ரயில் வரும் நேரத்தை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் ரயில் மறியல் காரணமாக இன்று காலை அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Makkalமே 18, 2022 - 12:14:44 PM | Posted IP 162.1*****