» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியா போரை நிறுத்த வல்லரசுகள் உதவாவிடில் ஆயுத போட்டி ஏற்படும் : ஸெலென்ஸ்கி
வெள்ளி 26, செப்டம்பர் 2025 12:56:47 PM (IST)
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு வல்லரசு நாடுகள் உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றி ஸெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினார், போர் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தப் போர் ஒரு ஆபத்தான ஆயுதப் போட்டியை கட்டவிழ்த்துவிட உதவுவதாக எச்சரித்தார்.உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் அசுரத்தனமான புதுமைகளை விவரிக்கும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் வருகை மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி "மிகவும் அழிவுகரமானது" என்று ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
மேலும், ரஷிய அதிபர் புதின் போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட ரஷியாவிடம் இப்போது போரை நிறுத்த வலியுறுத்துவதே மேலானது என்று 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் கூறினார்.
மேலும், "மனித வரலாற்றில் மிகவும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை நாம் இப்போது சந்தித்து வருகிறோம், ஏனெனில் அதில் செயற்கை நுண்ணறிவு வருகை அளப்பறியது," என்று அவர் கூறினார். ஆனால் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் "நண்பர்களும் ஆயுதங்களும்" மட்டுமே என்று கூறினார்.
"உலகம் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் கூட பதிலளிக்க முடியாவிட்டால், சர்வதேச பாதுகாப்பிற்கான வலுவான தளம் இல்லையென்றால், பூமியில் அமைதி இருக்குமா?" "சர்வதேச நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது." நீண்டகால ராணுவ கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல," என்று மேலும் அவர் கூறினார்.
உக்ரைனுக்கு அதன் ராணுவ உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தியவர், சர்வாதிகாரிகள் அணிவகுப்புகளில் காட்டுவதற்காக பெரிய, பெரிய திறன்கள் கொண்ட ஏவுகணைகள் உக்ரைனில் இல்லை, ஆனால் 2,000, 3,000 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடிய ட்ரோன்கள் எங்களிடம் உள்ளன.
"எங்கள் வாழ்க்கை உரிமையைப் பாதுகாக்க அவற்றை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை." உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் நேட்டோவின் திறன் குறித்து சந்தேகம் எழுப்பிய ஜெலன்ஸ்கி, ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்பாராத விதமாக ரஷியாவை தோற்கடிக்க முடியும் என்று கூறியதை பாராட்டினார்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்து ஜெலென்ஸ்கின் இவ்வாறு பேசியுள்ளார்.
செவ்வாயன்று டிரம்ப், ரஷியாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில்தான் உக்ரைன் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் இந்த வெற்றிவாகையைச் சூடும். நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போா் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்.
ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொடங்கியுள்ளாா். ஓா் உண்மையான ராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போா் சில வாரங்களில் முடிந்துவிடும். தற்போது புதினும், ரஷியாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா். ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க உக்ரைனுக்கு இதுவே சரியான தருணம்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும். நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு அசாதாரண போர்க்கள மாற்றமாக இருக்கும். நேட்டோ வான்வெளியை மீறும் ரஷிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார். இரு நாடுகளிடையேயான போர் நிறுத்த முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வந்தாலும், நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் போரால் உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போரில் சிக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள்: பாவங்களின் தீவில் நடந்தது என்ன?
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:37:23 AM (IST)

இந்தியாவை உலகோடு இணைக்கும் மொழி தமிழ்: மலேசியாவில் பிரதமர் மோடி பேச்சு
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:18:37 AM (IST)

இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி - 169பேர் காயம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:27:24 PM (IST)

டிரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு !
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:09:39 PM (IST)

ஐநா கௌரவப் பட்டியலில் இந்தியா: 2026-க்கான நிதிப்பங்கை முன்கூட்டியே செலுத்தி சாதனை!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:14:49 PM (IST)

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)

