» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு: பிப்ரவரி 11-ஆம் தேதி பொதுத்தேர்தல்!
வெள்ளி 3, நவம்பர் 2023 5:02:59 PM (IST)
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 11-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் அரசியல் குழப்பமும் நிலவியது. இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே கடந்த ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி கலைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் அன்வாருல்-ஹக்-கக்கர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அங்கு நடைபெற்று வருகிறது.
அந்த நாட்டு அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த 60 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டதால் 90 நாட்களில் தேர்தலை நடத்தி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் எல்லை நிர்ணயம், தொகுதி மறுவரையறை போன்ற பணிகள் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. எனினும் தேர்தல் நடைபெறும் சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே தேர்தலை விரைந்து நடத்த கோரி பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி காசி பேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சஜீல் ஸ்வாதி ஆஜரானார். அப்போது அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 29-ஆம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும்.
எனவே பிப்ரவரி 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு தேர்தல் ஆணையம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனினும் தேர்தல் தேதி தள்ளி போனதால் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.