» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காலக்கெடு முடிந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்

வியாழன் 2, நவம்பர் 2023 12:35:10 PM (IST)



காலக்கெடு முடிவுக்கு வந்ததால் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்து வந்ததால் போர்க்களமானது. இதனால் சொந்த நாட்டை விட்டு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். வாழ்க்கை செலவு, கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தானை தேடியே பெரும்பாலானோர் வந்தனர்.

இதுவரை 13 லட்சம் ஆப்கானியர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு பாகிஸ்தானில் தங்குவதற்கான அந்தஸ்தை பெற்ற நிலையில் 20 லட்சம் மக்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசித்து வந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியபோது மேலும் லட்சக்கணக்கான மக்கள் அங்கியிருந்து வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது பாகிஸ்தானில் பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் உடனான பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிப்பு, தலீபான்கள் உடனான உறவில் விரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள ஆப்கான் அகதிகளை நவம்பர் 1-ந்தேதிக்குள் வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது. மேலும் தடையை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கப்பட்டது.

இதனால் கடந்த மாதத்திற்குள் எண்ணற்ற ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர். அதில் பலர் அங்கேயே தங்கியிருந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சியதாக தெரிவித்தனர். இந்தநிலையில் பாகிஸ்தான் கொடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நாட்டில் எந்தவித ஆவணமும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் நாடு கடத்தி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள காராச்சி, ராவல்பிண்டி, கைபர் பக்துகுவா மாகாணம், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு ஐநா அமைப்பு, உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் இந்த நடவடிக்கை காரணமாக கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி சர்ப்ராஸ் புக்டி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "இந்த நடவடிக்கை சரியான ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வசிக்கும் எந்தவொரு நபரையும் திருப்பி அனுப்பும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.’’ என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory