» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காஸாவில் பலியான மனிதாபிமான ஊழியர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு : ஐ.நா.
செவ்வாய் 17, அக்டோபர் 2023 11:56:12 AM (IST)
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததையடுத்து, காஸாவில் பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மனிதாபிமான ஊழியர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
திங்களன்று, ஏழு பொதுமக்கள் பாதுகாப்பு உறுப்பினர்கள் விமானத் தாக்குதலின் போது கொல்லப்பட்டனர். இதன் மூலம், பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆகக் அதகிரித்திருப்பதாக மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஐ.நா அமைப்பு கூறியிருக்கிறது. மருத்துவமனைகள் அபாயத்தின் விளிம்பில் உள்ளன, ஏனெனில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் ஜெனரேட்டர்களை இயக்க பயன்படுத்தப்படும் எரிபொருள் இருப்பு கிட்டத்தட்ட முழுவதுமாக தீர்ந்துவிட்டதால், ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் அந்த அறிக்கியல் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் கிழக்கு கான் யூனிஸ் பகுதிக்கு ஞாயிறன்று பகுதியளவு நீர் விநியோகத்தை அளித்திருந்தனர். காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.
அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 10 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.ஏற்கெனவே, இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன. மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். பல்லாயிரக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா்.