» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நிலவில் சந்திரயான் - 3 தரையிறங்கியது மிகப் பெரிய சாதனை: பாகிஸ்தான் பாராட்டு
ஞாயிறு 27, ஆகஸ்ட் 2023 7:25:14 PM (IST)
'நிலவில் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கியது மிகப் பெரிய அறிவியல் சாதனை' என, பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து பிரிந்த 'பிரஜ்ஞான் ரோவர்' தற்போது நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலுாச் நேற்று கூறியதாவது: நிலவில் சந்திரயான் - 3 தரையிறங்கியது மிகப் பெரிய அறிவியல் சாதனை. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த சாதனைக்கும், பெருமைக்கும் தகுதியானவர்கள்.
வளர்ச்சி அடைந்த நாடுகள், மிக அதிக செலவில் இதுபோன்ற சாதனையை மேற்கொள்ளும் நிலையில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த அபார சாதனையை படைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோவின் சாதனையை பல நாடுகளும் பாராட்டிய நிலையில், பாகிஸ்தான் அரசு மவுனமாக இருந்தது.ஆனாலும், பாகிஸ்தானிலிருந்து வெளியாகும், 'டான், எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' போன்ற முன்னணி நாளிதழ்கள், இதை முதல் பக்கத்தில் வெளியிட்டதுடன், இந்தியாவின் சாதனையை புகழ்ந்தும் எழுதியிருந்தன. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு சார்பிலும் தற்போது அதிகாரப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.