» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை விழுந்து 11 பேர் பலி
செவ்வாய் 25, ஜூலை 2023 8:01:34 AM (IST)
சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்..
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் கிகிஹார் நகரில் ஒரு பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்காக பள்ளி வளாகத்திலேயே உடற்பயிற்சி கூடமும் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தை மேலும் விரிவுபடுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக உடற்பயிற்சி கூடத்துக்கு அருகிலேயே மற்றொரு வகுப்பறையை பள்ளி நிர்வாகத்தினர் கட்டி வருகின்றனர்.
இதனால் கட்டுமானத்துக்கு தேவையான கற்கள், கம்பிகள் போன்றவை உடற்பயிற்சி கூட மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது மேற்கூரையில் வைக்க பயன்படும் பெர்லைட் எனப்படும் கனிமப்பொருளையும் கட்டுமான பணியாளர்கள் அங்கு குவித்து வைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கூரையில் இருந்த பெர்லைட் மழையில் நனைந்தது. இது நீரை அதிகமாக உறிஞ்சும் தன்மையுடையது என்பதால் நீரில் நனைந்து அதன் எடை கணிசமாக அதிகரித்தது.
இதன் எடை அதிகரித்ததால் அதன் பாரம் தாங்காமல் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சுமார் 20 பேர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மீது இந்த மேற்கூரை சரிந்து விழுந்து அமுக்கியது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த கட்டிடத்தின் காண்டிராக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.