» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 15 பேர் உயிரிழப்பு!
புதன் 5, ஜூலை 2023 5:16:54 PM (IST)
தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் பெய்து வரும் கனமழைக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிச்சுவானில் வெள்ளம் காரணமாக 85 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி கனமழையினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழையின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மேலும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பருவகால மழை ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெற்கில் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இருப்பினும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தாண்டு பருவமழை மிக மோசமானதாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.