» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷிப்ட் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பாகிஸ்தானில் பரபரப்பு!
வெள்ளி 21, ஜனவரி 2022 4:33:33 PM (IST)
பாகிஸ்தானில் ஷிப்ட் முடிந்து விட்டதாக கூறி விமானத்தை விமானி ஒருவர் இயக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகே-9754 விமானம் ரியாத்திலிருந்து இஸ்லாமாபாத் வரை இயக்கப்படவிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக செளதி அரேபியாவில் உள்ள தம்மமில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானத்தை இயக்க விமானி மறுத்ததால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தன்னுடைய ஷிப்ட் முடிந்ததால் விமானத்தை இயக்க முடியாது என விமானிக் கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு மத்தியில், விமானத்திலிருந்து வெளியேற மறுத்த பயணிகள் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தை கண்டித்து போராட்டம் நடத்த தொடங்கினர்.
இதை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவியதையடுத்து, தம்மம் விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், இஸ்லாமபாத்திற்கு செல்லும் வரை பயணிகளுக்கு தங்குமிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானத்தின் பாதுகாப்பிற்கு ஒரு விமானி ஓய்வெடுப்பது அவசியம். அனைத்து பயணிகளும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு சென்றடைவார்கள் அதுவரை தங்கும் விடுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.