» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வளரும் நாடுகளுக்கு 50 கோடி பைசர் தடுப்பூசி: அமெரிக்க அதிபர் அறிவிப்பு
வியாழன் 23, செப்டம்பர் 2021 12:39:13 PM (IST)
வளரும் நாடுகளுக்கு 50 கோடி பைசர் கரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது பேரவை கூட்டம் நடைபெறும் வேளையில் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிடுவார் என்று அந்தோணி கூறியுள்ளார். ஏற்கனவே 50 கோடி கரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
இப்பொழுது அமெரிக்க அதிபர் மேலும் 50 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக இன்று அறிவிக்கிறார். ஒட்டுமொத்தமாக உலக நாடுகளுக்கு நூறுகோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்க உள்ளது.அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்களுக்கு போடப்படும் ஒரு தடுப்பூசிக்கு 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்று அந்தோணி தெரிவித்தார்.
ஐநா பொது பேரவை கூட்ட அரங்குக்கு வெளியே காணொலி காட்சி மூலம் உலக கரோனா உச்சி மாநாடு ஒன்றை அமெரிக்க அதிபர் கூட்டியுள்ளார். அந்தக் கூட்டத்தில் 50,0000000 தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்குவது குறித்து அமெரிக்க அதிபர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 70% பேருக்காவது தடுப்பூசி போடப்பட வேண்டும் அப்பொழுதுதான் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு 110 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தன்னுடைய அறிவிப்பின் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு உதவியாக செயல்படுவார். அதே நேரத்தில் மற்ற வல்லரசு நாடுகள் அமெரிக்கா போல வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் உதவுவதை அவரது செயல் ஊக்குவிக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது பேரவை கூட்டத்தில் பேசும் பொழுது அமெரிக்க அதிபர் ஏற்கனவே 16 கோடி தடுப்பூசிகளை நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது என்று கூறினார் மற்ற நாடுகள் வழங்கிய ஒட்டுமொத்த தடுப்பூசிகளை விட இது அதிகம் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 590 கோடி தடுப்பூசிகள் உலக மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 43% தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் உள்ள நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றவே அமெரிக்கா தடுப்பூசி மருந்துகளை ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வழங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.